07 September 2021

தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகளுக்கு ஜாக்டோ ஜியோ வரவேற்பு!

ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கடந்த 20.08.2021 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை மரியாதை நிமித்ததமாகச் சந்தித்தனர். இச்சந்திப்பின்போது தமிழக முதலமைச்சராகப் பதவி பொறுப்பேற்றதற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். மேலும் , மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது , முடக்கப்பட்டுள்ள அகவிலைப்படியினை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பான ஜாக்டோ ஜியோவின் சார்பாக கோரிக்கை மனுக்களை அளித்தனர்.


இன்றைய தினம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தமிழக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் தொடர்பாக 13 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்கள்.


மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகளுக்கு ஜாக்டோ ஜியோ நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது. ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள திராவிட முன்னேற்றக் கழக அரசு என்றைக்குமே அரசுக்கும் ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் இடையேயான நல்லுறவினைப் பேணிப் பாதுகாக்கும் என்பதனை நிரூபிக்கும் விதமாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் அமைந்துள்ளது. மேலும் , ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் நியாயமான உரிமைகளை வென்றெடுப்பதற்காக 2017 ல் தொடங்கப்பட்ட ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பிற்கு , தொடங்கிய நாள் முதலே தனது ஆதரவினை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது நல்கி வந்துள்ளார்.


அதோடு மட்டுமல்லாமல் , ஜாக்டோ ஜிபோ போராட்டக் களத்திற்கே வந்து , கழக ஆட்சி அமைந்தவுடன் ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியினையும் அளித்து வந்துள்ளார் . 2017 முதல் 2019 வரையிலான போராட்டக் காலம் அனைத்தும் பணிக்காலமாக வரன்முறைப்படுத்தப்படும் , ஒழுங்கு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட பதவி உயர்வு மீண்டும் வழங்கப்படும் , பழிவாங்கலால் செய்யப்பட்ட பணிமாறுதல் இரத்து செய்யப்படும் போன்ற அறிவிப்புகள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் போராட்ட காலத்தில் அளித்த வாக்குறுதிகளை எள்ளவும் மாற்றாமல் நிறைவேற்றி உள்ளார் என்பதனை நன்றிப் பெருக்கோடு ஜாக்டோ ஜியோ வரவேற்கிறது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தனது 110 உரையினை பின்வரும் வரிகளோடு முத்தாய்ப்பாக நிறைவு செய்துள்ளர் . " மக்களாட்சித் தத்துவத்தின் நான்கு தூண்களின் ஒன்றான நிருவாகத்தின் அடித்தளமாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள். அவர்களது நலனில் எப்போதுமே அக்கறை கொண்டு அவர்களது நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு படிப்படியாக , நிச்சயமாக , உறுதியாக நிறைவேற்றும் ” மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் முத்தாய்ப்பான நிறைவுரை என்பது , ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் பிரதான கோரிக்கையான மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையினை ஏற்படுத்தியுள்ளது. 


மாநில ஒருங்கிணைப்பாளர்கள் 

ஜாக்டோ ஜியோ 



No comments:

Post a Comment

Featured Post

IT Projection Form FY 2025-26 (AY 2026-27) Version 26.0

வருமான வரி கணிப்பு படிவம்  நிதியாண்டு (2025 - 2026) Income Tax Projection Form - Version 26.0  (Old Regime and New Regime)  Financial Year 2...