Home

Showing posts with label Sangam Age. Show all posts
Showing posts with label Sangam Age. Show all posts

07 February 2024

பத்துப்பாட்டு நூல்கள்

பத்துப்பாட்டு : 

சங்க கால இலக்கியங்களில் முக்கியமானவை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு. இவை இரண்டும் சேர்ந்ததே பதினெண் மேல்கணக்கு நூல்கள். தொகை என்பதற்கு பல புலவர்கள் பாடியது என்றும் பாட்டு என்பதற்கு தனி ஒரு புலவர் பாடியது என்றும் பொருள். 


பத்துப்பாட்டு நூல்கள் கடைச்சங்க காலத்தில் தோன்றியவை. பத்துப்பாட்டு என்பது பத்து தனித்தனி பாடல்களின் தொகுப்பாகும். ஒவ்வொரு பாடலும் நூறு அல்லது அதற்கு மேலான அடிகளைக் கொண்ட ஒரு நூலாக விளங்குகிறது. 


"முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை

பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய

கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி‌ பட்டினப்

பாலை கடாத்தொடும் பத்து". ,

- என்ற வெண்பா மூலம் பத்துப்பாட்டில் உள்ள நூல்களின் பெயர்களை அறியலாம். 


அதாவது திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, முல்லைப் பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகிய நூல்களைக் கொண்டதே பத்துப்பாட்டு நூல்கள் ஆகும். பத்துப்பாட்டில் உள்ள பாடல்கள் பல்வேறு காலங்களில் பல்வேறு புலவர்களால் பாடப்பட்டவை ஆகும். ஆற்றுப்படை நூல்களில் வரும் ஆற்றுப்படுத்துதல் என்பதன் பொருள் வழிப்படுத்துதல். 


1. திருமுருகாற்றுப்படை : 

திருமுருகாற்றுப்படை இயற்றியவர் நக்கீரர். பாட்டுடையத் தலைவன் முருகன். இந்நூல் 317 அடிகளைக் கொண்ட ஒரே பாடலாக உள்ளது. முருகனிடம் வீடுபேறு அடைந்த ஒரு புலவர், வீடுபேறு அடைய விரும்பும் புலவரை ஆற்றுப்படுத்தி அனுப்புகிறார். எனவே இதற்கு புலவர் ஆற்றுப்படை என்ற மற்றொருப் பெயரும் உண்டு. முருகப் பெருமானின் திருவுருவம், அவரது ஆறுபடை வீடுகள், அங்கு நடைபெறும் வழிபாட்டு முறைகள் ஆகியவை பற்றிக் கூறுகிறது. 


2. பொருநராற்றுப்படை : 

பொருநராற்றுப்படை ஆசிரியர் முடத்தாமக் கண்ணியார். பாட்டுடைய தலைவன் கரிகாலச் சோழன். இந்நூல் 248 அடிகளைக் கொண்ட ஒரே பாடலாக உள்ளது. கரிகாலனிடம் பரிசில் பெற்ற ஒரு பொருநன், பரிசில் பெற விரும்பும் பொருநனை ஆற்றுப்படுத்தி அனுப்புகிறார். பொருநன் என்பவன் யாழ் இசைத்துக் கொண்டு, பாடல் பாடிக் கொண்டு, தாளத்துக்கு ஏற்ப நடித்துக் கொண்டு வந்து அரசனிடம் பரிசில் பெரும் கலைஞர்கள் ஆவார். கரிகாலனின் பெருமை, வீரச் செயல்கள், கொடைத்தன்மை, போர்த்திறம், வெண்ணிப் போரில் பெற்ற வெற்றி, அரசியல் மேன்மை, விருந்தோம்பல் குணம், சோழ நாட்டின் வளங்கள், பாலை யாழின் சிறப்பு, பொருநனின் வறுமை நிலை, பொருநன் மனைவி பாடினி, பண்டமாற்று முறை, நெசவுத் தொழில் ஆகியவை பற்றிக் கூறுகிறது. 


3. சிறுபாணாற்றுப்படை : 

சிறுபாணாற்றுப்படை இயற்றியவர் நல்லூர் நத்தத்தனார். பாட்டுடையத் தலைவன் நல்லியக் கோடன். இந்நூல் 269 அடிகளைக் கொண்ட ஒரே பாடலாக உள்ளது. சிறிய யாழை வாசிப்போர் சிறு பாணர் என்று அழைக்கப்பட்டனர். நல்லியக் கோடனிடம் பரிசில் பெற்ற ஒரு பாணன், பரிசில் பெற விரும்பும் பாணனை ஆற்றுப்படுத்தி அனுப்புகிறார். சிறிய யாழின் சிறப்பு, சிறு பாணனின் வறுமை நிலை, பாணன் மனைவி பாணினி, நல்லியக் கோடனின் பெருமை, கொடைப் பண்பு, விருந்தோம்பல் குணம், அவனது ஒய்மான் நாட்டின் வளங்கள், கடையேழு வள்ளல்களின் வரலாறு, மூவேந்தர்களின் நாடுகள் ஆகியவை பற்றிக் கூறுகிறது. 


4. பெரும்பாணாற்றுப்படை : 

பெரும்பாணாற்றுப்படை ஆசிரியர் கடியலூர் உருத்திரங் கண்ணனார். பாட்டுடைய தலைவன் தொண்டைமான் இளந்திரையன். இந்நூல் 500 அடிகளைக் கொண்ட ஒரே பாடலாக உள்ளது. பெரிய யாழை வாசிப்போர் பெரும் பாணர் என்று அழைக்கப்பட்டனர். இளந்திரையனிடம் பரிசில் பெற்ற ஒரு பாணன், பரிசில் பெற விரும்பும் பாணனை ஆற்றுப்படுத்தி அனுப்புகிறார். பெரிய யாழின் சிறப்பு, பெரும் பாணரின் வறுமை நிலை, பாணன் மனைவி பாணினி, இளந்திரையனின் கொடைப் பண்பு, தொண்டை நாட்டின் வளங்கள், பல தொழில் புரியும் மக்கள், வேடர், ஆயர், உழவர், பரதவர், எயினர், மறவர், அந்தணர் ஆகிய குடிகளையும் அவர்களின் விருந்தோம்பல் பண்பு, தொண்டை நாட்டின் தலைநகரான காஞ்சி மாநகரின் சிறப்பு, கடற்கரையில் இருந்த வானுயர்ந்த கலங்கரை விளக்கம், உப்பு வணிகம் செய்த உமணர்கள் ஆகியவை பற்றிக் கூறுகிறது. 


5. முல்லைப் பாட்டு : 

முல்லைப் பாட்டு ஆசிரியர் நப்பூதனார். பாட்டுடைய தலைவன் பெயர் தெரியவில்லை. இந்நூல் 103 அடிகளைக் கொண்ட ஒரே பாடலாக உள்ளது. தலைவியைப் பிரிந்து தலைவன் போர்க்களம் செல்வது, தலைவனின் பிரிவை தாங்க முடியாமல் தலைவி வருந்துவது, தலைவன் வெற்றியோடு திரும்பி வருவான் என முதிய பெண் ஆறுதல் கூறுவது, தமிழர்களின் போர்க்களம், போர்க் கருவிகள், யவனர்கள் காவல் புரிவது, முல்லை நில கடவுள், பாவை விளக்கு, மழைக் காலத்தில் பூக்கும் மலர்கள் ஆகியவை பற்றிக் கூறுகிறது. 


6. மதுரைக் காஞ்சி : 

மதுரைக் காஞ்சி ஆசிரியர் மாங்குடி மருதனார். பாட்டுடைய தலைவன் நெடுஞ்செழியன். இந்நூல் 782 அடிகளைக் கொண்ட ஒரே பாடலாக உள்ளது. உலகில் எதுவும் நிலையில்லை என்ற உண்மையை தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு எடுத்துக் கூறுவது, நெடுஞ்செழியனின் வீரம், நேர்மையான ஆட்சி, முன்னோர்களின் சிறப்பு, பாண்டிய நாட்டின் இயற்கை வளம், ஐவகைத் திணைகள், மதுரையில் இயங்கிய வந்த பாண்டியர்கள் நீதிமன்றம், நாலங்காடி மற்றும் அல்லங்காடி, ஏழைகளுக்கு உணவளிக்கும் அன்ன சாலைகள், மதுரையின் தோற்றம், வீதிகள் மற்றும் வீடுகளின் அமைப்பு, மதுரையைச் சுற்றி இருந்த மதில்கள், அகழிகள், சமண - பௌத்த பள்ளிகள், அந்தணர் பள்ளிகள், சமய சகிப்புத்தன்மை, பலவகை தொழில்கள், கடல்கடந்த வாணிகம், பூவேலை செய்யப்பட்ட ஆடைகள், ரத்தினக் கற்கள் பதித்த ஆபரணங்கள் ஆகியவை பற்றிக் கூறுகிறது. 


7. நெடுநல்வாடை : 

திருமுருகாற்றுப்படை இயற்றியவர் நக்கீரர். பாட்டுடையத் தலைவன் நெடுஞ்செழியன். இந்நூல் 188 அடிகளைக் கொண்ட ஒரே பாடலாக உள்ளது. நெடுநல்வாடை என்பதற்கு நீண்ட நல்ல வாடைக் காற்று என்று பொருள். வடக்கு இருந்து வீசுவது வடை காற்று தெற்கில் இருந்து வீசுவது தென்றல் காற்று. வாடை என்பது குளிர்க் காற்றை குறிக்கிறது. அரசன் போர்களம் செல்கிறான். அரசனைப் பிரிந்து வாடும் அரசிக்கு வாடைக் காற்று நெடியதாக தோன்றுகிறது. அதனைக் கண்ட அரண்மனை பெண் அரசன் விரைவில் திரும்ப வேண்டும் என்று கொற்றவை வழிபாடு செய்கிறாள். அரசன் போர்களத்தில் புண்பட்ட வீரர்களுக்கும், யானைகளுக்கும், குதிரைகளுக்கும் அன்பு காட்டி ஆறுதல் செலுத்துகிறார். வீரன் ஒருவனுடன் அரசன் போர்க் களத்தைச் சுற்றிப் பார்ப்பது, பெரிய அரண்மனை, உயரமான மதில் சுவர்கள், கோட்டை வாயில்கள், அரசனது அந்தப்புரம், சதுர வடிவில் கட்டப்பட்ட வீடுகள், ஆடை அணிகலன்கள், சடங்குகள், பழக்க வழக்கங்கள் ஆகியவை பற்றிக் கூறுகிறது. 


8. குறிஞ்சிப் பாட்டு : 

குறிஞ்சிப் பாட்டு ஆசிரியர் கபிலர். பாட்டுடைய தலைவன் ஆரிய அரசன் பிரகதத்தன். இந்நூல் 261 அடிகளைக் கொண்ட ஒரே பாடலாக உள்ளது. ஆரிய அரசன் பிரகதத்தனுக்கு தமிழர்களின் அறத்தை கூறுவறு, கற்பு மணம், களவு மணம், தலைவி தலைவன் மேல் கொண்ட அன்பு, தலைவன் யானையை விரட்டிய வீரம், தலைவனைப் பிரிந்த தலைவி துயரப்படும் காட்சி, நவரத்தின ஆபரணங்கள், 99 வகையான மலர்கள், குறிஞ்சி நிலத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை, மலை வளம், மறுபிறப்பில் நம்பிக்கை, முருகன் வழிபாடு ஆகியவை பற்றிக் கூறுகிறது. 


9. பட்டினப்பாலை : 

பட்டினப்பாலை ஆசிரியர் கடியலூர் உருத்திரங் கண்ணனார். பாட்டுடைய தலைவன் கரிகாலச் சோழன். இந்நூல் 301 அடிகளைக் கொண்ட ஒரே பாடலாக உள்ளது. பொருள் தேட வேண்டி தலைவன் தலைவியை பிரிந்து செல்ல நினைக்கிறான். தான் பிரிந்து செல்வதை தலைவி தாங்கமாட்டால் எனக் கருதும் தலைவன் தனது முடிவைக் கைவிடுவதைப் பற்றி கூறுகிறது. பட்டினம் என்பது துறைமுக நகரத்தைக் குறிக்கிறது. கரிகாலனின் சிறப்பு, வீரச் செயல்கள், கொடைப் பண்பு, அவனது தலைநகரமான காவிரிப் பூம்பட்டினத்தின் சிறப்பு, அங்கு நிறுத்தப்பட்டு இருந்த கப்பல்கள், கடல் கடந்த வாணிகம், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, சுங்க வரி வசூல், ஆகியவை பற்றிக் கூறுகிறது. 


10. மலைபடுகடாம் : 

மலைபடுகடாம் ஆசிரியர் பெருங்கௌசிகனார். பாட்டுடைய தலைவன் நன்னன் சேய் நன்னன். இந்நூல் 583 அடிகளைக் கொண்ட ஒரே பாடலாக உள்ளது. நன்னனிடம் பரிசில் பெற்ற ஒரு கூத்தன், பரிசில் பெற விரும்பும் கூத்தனை ஆற்றுப்படுத்தி அனுப்புகிறார். எனவே இதற்கு கூத்தர் ஆற்றுப்படை என்று மற்றொருப் பெயரும் உண்டு. நன்னன் ஒரு சிறந்த போர் வீரன், கொடை வள்ளல், விருந்தோம்பல் குணம் மிகுந்தவன். தொண்டை நாட்டின் ஒரு பகுதியாக இருந்த பல் குன்றக் கோட்டம் என்பது இவனுடைய நாடு. அதன் தலைநகர் செங்கன்மா என்கிற செங்கம். நாகத்தை வழிபடுதல், நடுகற்கள் வழிபாடு, நன்னன் நாட்டு மக்களின் வாழ்க்கை முறை, உணவுப் பொருட்கள், பழக்க வழக்கங்கள் ஆகியவை பற்றிக் கூறுகிறது. 






எட்டுத்தொகை நூல்கள்

எட்டுத்தொகை : 

சங்க கால இலக்கியங்களில் முக்கியமானவை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு. இவை இரண்டும் சேர்ந்ததே பதினெண் மேல்கணக்கு நூல்கள். தொகை என்பதற்கு பல புலவர்கள் பாடியது என்றும் பாட்டு என்பதற்கு தனி ஒரு புலவர் பாடியது என்றும் பொருள். 


எட்டுத்தொகை நூல்கள் கடைச்சங்க காலத்தில் தோன்றியவை. எட்டுத்தொகை என்பது எட்டு நூல்களின் தொகுப்பாகும். 

"நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு 

ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் 

கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று 

இத்திறத்த எட்டுத் தொகை". 

- என்ற வெண்பா மூலம் எட்டுத்தொகை நூல்களின் பெயரை அறியலாம். 


அதாவது நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களைக் கொண்டதே எட்டுத்தொகை நூல்கள் ஆகும். எட்டுத்தொகை நூல்களில் உள்ள பாடல்கள் பல்வேறு புலவர்களால் பல்வேறு கால கட்டங்களில் பாடப்பட்டவை. இதில் 2352 பாடல்களை 25 அரசர்கள், 30 பெண்பாற் புலவர்கள் உட்பட மொத்தம் 700 புலவர்கள் பாடியுள்ளனர். மேலும் 102 பாடல்களுக்கு பாடியவர்கள் பெயர் தெரியவில்லை. 


எட்டுத்தொகை நூல்களை அகப்பொருள் சார்ந்தவை, புறப்பொருள் சார்ந்தவை என இரண்டாகப் பிரிக்கின்றனர். நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகிய ஐந்தும் அகம் சார்ந்த நூல்கள். பதிற்றுப்பத்து, புறநானூறு ஆகிய இரண்டும் புறம் சார்ந்த நூல்கள். பரிபாடல் மட்டும் அகமும் புறமும் கலந்த நூலாகும். 


1. நற்றிணை : 

நற்றிணை என்பது 400 பாடல்களைக் கொண்ட நூலாகும். இதைத் தொகுத்தவர் பெயர் தெரியவில்லை. தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி.  


நற்றிணைப் பாடல்கள் அக்காலச் சமூகத்தைப் பற்றி அறிய பெரிதும் உதவுகின்றன. மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, கொடைத் தன்மை, மக்களின் வாழ்க்கை முறைகள், நம்பிக்கைகள், சடங்குகள் போன்றவற்றை உணர்த்துகின்றன. 


பல்லி கத்தும் ஓசையை வைத்து சகுனம் பார்க்கும் வழக்கம், கால்பந்து விளையாட்டை பெண்களும் விளையாடும் வழக்கம், கிளி, நாரை ஆகியவற்றைத் தூதுவிடும் வழக்கம், தலைவனைப் பிரிந்து வாடும் தலைவி அவனது வருகையை சுவரில் கோடிட்டு எண்ணும் வழக்கம் ஆகியவற்றை நற்றிணைப் பாடல்கள் வாயிலாக அறிகிறோம். 


அதியமான், அழிசி, ஆய் அண்டிரன், ஓரி, காரி, உதியன், செங்குட்டுவன், சேந்தன், நன்னன், தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் போன்ற வேந்தர்களும் குறுநில மன்னர்களும் நற்றிணையில் குறிப்பிடப்பட்டுள்ளனர். 


2. குறுந்தொகை : 

குறுந்தொகை என்பது 400 பாடல்களைக் கொண்ட நூலாகும். இதைத் தொகுத்தவர் பூரிக்கோ. தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.  


குறுந்தொகைப் பாடல்கள் மூலம் சங்க காலத் தமிழர்களின் இல்லற வாழ்க்கை, ஆடை அணிகலன்கள், உணவுப் பழக்கங்கள், பண்டமாற்று முறை, விருந்தோம்பல் வழக்கம், தலைவியைப் பிரிந்து தலைவன் பொருள் ஈட்டச் செல்லுதல், பொழுதுபோக்கு விளையாட்டுகள் ஆகியவைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. 


3. ஐங்குறுநூறு : 

ஐங்குறுநூறு என்பது 500 பாடல்களைக் கொண்ட நூலாகும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஒவ்வொரு திணைக்கும் 100 பாடல்கள் பாடப்பட்டு உள்ளன. இதைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார். தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.  


அரசன் வெற்றியுடன் வாழ வேண்டும். மக்கள் குறைகளை போக்க வேண்டும். அப்போது தான் நாட்டில் அமைதி நிலவும். மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ முடியும் எனக் கூறுகிறது. தலைவி தலைவனுடன் சென்றதால் தலைவியின் தாய் துன்புறும் காட்சி வருகிறது. தொண்டி, கொற்கை, தகட்டூர் போன்ற நகரங்களைப் பற்றியும் தேனூர், ஆமூர் போன்ற ஊர்களைப் பற்றியும் கூறுகிறது. கற்பு வாழ்க்கை, களவு மணம், நடுகற்கள் வழிபாடு முறை, 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அந்தணர்கள் பற்றியும் கூறுகிறது. 


4. பதிற்றுப்பத்து : 

பதிற்றுப்பத்து என்பது 100 பாடல்களைக் கொண்ட நூலாகும். ஒவ்வொரு 10 பாடல்களும் ஒரு சேர மன்னர் மீது பாடப்பட்டு உள்ளது. இதில் 80 பாடல்கள் மட்டுமே தற்போது வரை கிடைத்துள்ளன. முதல் பத்தும் கடைசி பத்தும் கிடைக்கவில்லை. இதைத் தொகுத்தவர் மற்றும் தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.  


பதிற்றுப்பத்தில் பத்து சேர அரசர்களின் வரலாறு இடம் பெற்றுள்ளது. 

2 ஆம் பத்து இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பற்றியும், 3 ஆம் பத்து பல்யானை செல்கெழு குட்டுவன் பற்றியும், 4 ஆம் பத்து களங்காய்க் கண்ணி நாற்முடிச் சேரல் பற்றியும், 5 ஆம் பத்து கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் பற்றியும், 6 ஆம் பத்து ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் பற்றியும், 7 ஆம் பத்து செல்வக் கடுங்கோ வாழியாதன் பற்றியும், 8 ஆம் பத்து பெருஞ்சேரல் இரும்பொறை பற்றியும், 9 ஆம் பத்து இளஞ்சேரல் இரும்பொறை பற்றியும் கூறுகிறது. முதல் பத்து உதியஞ் சேரலாதன் பற்றியும் கடைசிப் பத்து மாந்தரஞ்சேரல் இரும்பொறை பற்றியும் கூறுவதாக நம்பப்படுகிறது. 


5. பரிபாடல் : 

பரிபாடல் என்பது 70 பாடல்களைக் கொண்ட நூலாகும். இதில் 22 பாடல்கள் மட்டுமே தற்போது வரை கிடைத்துள்ளன. இதைத் தொகுத்தவர் மற்றும் தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.  


சிவன், முருகன், திருமால், பிரம்மா போன்ற கடவுள்கள் பற்றி கூறுகிறது. கடவுளை ஏற்போரும் மறுப்போரும் இருந்தனர். விரிநூல் அந்தணர், புரிநூல் அந்தணர் என இரு பிரிவினர் இருந்தனர். மதுரை மாநகர மக்கள் அந்தணர்கள் வேதம் ஓதுவதைக் கேட்டும் உறையூர் மற்றும் வஞ்சி மாநகர மக்கள் சேவல் கூவுவதைக் கேட்டும் விடியற் காலையிலேயே விழித்தனர். ஆறுகளின் குறுக்கே அணை கட்டி நீர்ப்பாசனம் செய்தனர். நடனமாடும் மகளிர் இருந்தனர். மாடு, யானை, குதிரை, கழுதை பூட்டிய வண்டிகளை வாகனங்களாகப் பயன்படுத்தினர். பூவேலைபாடுடன் கூடிய ஆடைகள் மற்றும் பலவகை அணிகலன்களை அணிந்தனர். முகம் பார்க்கும் கண்ணாடி இருந்தது. இரதி-மன்மதன் ஓவியங்களும் அகலிகையின் வரலாற்றை விளக்கும் ஓவியமும் எழுதப்பட்டு இருக்கிறது. நடனம் ஆடுவோர், பாடல் பாடுவோர், சூது ஆடுவோர் தங்கள் திறமையை நிரூபிக்க அவரவர் துறையில் போட்டி போட்டனர். 


6. கலித்தொகை : 

கலித்தொகை என்பது 150 பாடல்களைக் கொண்ட நூலாகும். இதைத் தொகுத்தவர் நல்லந்துவனார். தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.  


கடையேழு வள்ளல்களில் ஒருவனான பறம்பு மலை தலைவன் பாரியைப் பற்றி கபிலர் பாடியுள்ளார். ஏறுதழுவுதல், கற்பு மணம், களவு மணம், ஆண்களின் வீரம், பெண்களின் கற்பு நெறி, விருந்தோம்பல், நட்புக்கு தகுதி இல்லாதவர்கள் செய்யும் செயல்கள், அணிகலன்கள், கொடுக்கல் வாங்கல் கடன் பெறும் வழக்கம், இசைக்கருவிகள் பற்றி கூறப்பட்டுள்ளது. 


அளவுக்கு மீறி வரி வாங்கினால் நாடு பாழாகும். நேர்மையான வழியில் ஆண்கள் பொருள் ஈட்டுதல் வேண்டும். இராமாயணம், மகாபாரதம் மற்றும் புராணங்களில் வரும் செய்திகளை சுட்டிக் காட்டுகிறது. வேதம் ஓதும் அந்தணர்கள், வேள்வி செய்யும் அந்தணர்கள் இருந்தார்கள் எனக் கூறுகிறது. பொய் சாட்சி சொன்னவன் ஒரு மரத்தின் கீழ் நின்றால் அம்மரம் தீப்பற்றி எரியும், சந்திரனை ராகு என்னும் பாம்பு விழுங்குவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது, பல்லி சொல்லுக்கு பலன் உண்டு, பெண்களின் இடது கண் துடித்தால் நன்மை உண்டாகும் போன்ற நம்பிக்கைகளை மக்கள் பின்பற்றியதைக் கூறுகிறது. 


7. அகநானூறு : 

அகநானூறு என்பது 400 பாடல்களைக் கொண்ட நூலாகும். இதைத் தொகுத்தவர் உருத்திரக் கண்ணனார். தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி.  


சோழர்கள் குடவோலை தேர்தல் முறையில் சபை உறுப்பினர்களை தேர்வு செய்தனர். அலெக்ஸாண்டர் படையெடுத்து வந்த போது நந்தர்கள் தமது செல்வத்தை கங்கை ஆற்றின் அடியில் புதைத்து வைத்தனர். பண்டைய தமிழ்நாட்டின் வட எல்லையாக வேங்கட மலை இருந்தது. சேரலாதன் என்ற சேர மன்னன் வட இந்தியா மீது படையெடுத்துச் சென்று இமயத்தில் வில் அம்பு கொடியை நட்டார். வெண்ணிப் போரில் கரிகாலன் வெற்றி பெற்றார் என்றும் தோல்வி அடைந்த சேரலாதன் வடக்கிருந்து உயிர் துறந்தார். தலையாலங்கானம் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் பாண்டியன் நெடுஞ்செழியன் வெற்றி பெற்றார். கடையேழு வள்ளல்களில் ஒருவனான காரி, மற்றொரு வள்ளலான வில் வித்தையில் சிறந்த ஓரியை போரில் கொன்றார். முசிறி துறைமுகத்துக்கு வந்த யவனர்களின் கப்பல் பொன்னை கொடுத்துவிட்டு மிளகை ஏற்றிச் சென்றது. மேலும் கற்பு மணம், களவு மணம், திருமணச் சடங்குகள், நடுகற்கள் வழிபாடு போன்ற பல வரலாற்று செய்திகள் அகநானூற்று பாடல்களில் இடம் பெற்றுள்ளன. 


மேலும் இந்நூலில் வஞ்சி, மதுரை, காவிரிப்பூம்பட்டினம், முசிறி, தொண்டி, கொற்கை, கருவூர் போன்ற நகரங்களின் பெயர்களும் நன்னன், அதியமான், பேகன், ஆய் அண்டிரன், காரி, ஓரி போன்ற வள்ளல்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. 


8. புறநானூறு : 

புறநானூறு என்பது 400 பாடல்களைக் கொண்ட நூலாகும். இதைத் தொகுத்தவர் மற்றும் தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.  







ஐந்திணைகள்

ஐந்திணைகள் : 

தமிழர்கள் தங்கள் வாழ்வியலை அகம், புறம் என இரண்டாகப் பிரித்திருந்தனர். அதே போல் நிலத்தை ஐந்து திணைகளாகப் பிரித்திருந்தனர். அவையாவன: குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை. நிலம் அகத்தின் கீழ் வருவதால் அதை அன்பின் ஐந்திணை என்று அழைத்தனர். 


அகம் என்பது முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இவை ஐந்திணைகளுக்கும் தனித்தனியே ஒதுக்கப்பட்டு இருந்தன. முதற்பொருள் என்பது ஐந்திணைக்கு உரிய நிலம், பெரும்பொழுது, சிறுபொழுது ஆகியவற்றைக் கூறுகிறது. கருப்பொருள் என்பது ஐந்திணைக்கு உரிய மக்கள், தொழில், கடவுள், உணவு, விலங்கு, பறவை, மரம், மலர், பண், யாழ் ஆகியவற்றைக் கூறுகிறது. உரிப்பொருள் என்பது ஐந்திணைக்கு உரிய ஒழுக்கத்தைக் கூறுகிறது. 


பெரும்பொழுது ஒரு வருடத்தை ஆறு காலங்களாகவும் சிறுபொழுது ஒரு நாளினை ஆறு கூறுகளாகவும் பிரிக்கிறது. இளவேனில், முதுவேனில், கார்காலம், குளிர்காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம் ஆகிய ஆறும் பெரும்பொழுதுகள். வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் ஆகிய ஆறும் சிறுபொழுதுகள். 


1. குறிஞ்சித் திணை : 

குறிஞ்சி நிலம் என்பது மலையும் மலை சார்ந்த இடமாகும். குறிஞ்சி நில மக்கள் சேயோன்‌ அல்லது முருகனை கடவுளாக வழிபட்டனர். இங்கு வாழ்ந்த மக்கள் குறவர், குறத்தியர் என அழைக்கப்பட்டனர். முக்கியத் தொழிலாக வேட்டையாடுதல் இருந்தது. இவர்கள் மலை நெல், தினை ஆகிய உணவுகளை உண்டனர். குறிஞ்சி நில ஊர்கள் சிறுகுடி என்று அழைக்கப்பட்டன. 


2. முல்லைத் திணை : 

முல்லை நிலம் என்பது காடும் காடு சார்ந்த இடமாகும். முல்லை நில மக்கள் மாயோன் அல்லது திருமாலை கடவுளாக வழிபட்டனர். இங்கு வாழ்ந்த மக்கள் ஆயர், ஆய்ச்சியர் என அழைக்கப்பட்டனர். முக்கியத் தொழிலாக மேய்த்தல் தொழில் இருந்தது. இவர்கள் சாமை, வரகு ஆகிய உணவுகளை உண்டனர். முல்லை நில ஊர்கள் பாடி, சேரி என்று அழைக்கப்பட்டன. 


3. மருதத் திணை : 

மருத நிலம் என்பது வயலும் வயல் சார்ந்த இடமாகும். மருத நில மக்கள் இந்திரனை கடவுளாக வழிபட்டனர். இங்கு வாழ்ந்த மக்கள் உழவர், உழத்தியர் என அழைக்கப்பட்டனர். முக்கியத் தொழிலாக வேளாண்மை செய்தல் இருந்தது. செந்நெல், வெண்ணெல் ஆகிய உணவுகளை உண்டனர். மருத நில ஊர்கள் பேரூர், மூதூர் என்று அழைக்கப்பட்டன. 


4. நெய்தல் திணை : 

நெய்தல் நிலம் என்பது கடலும் கடல் சார்ந்த இடமாகும். நெய்தல் நில மக்கள் வருணனை கடவுளாக வழிபட்டனர். இங்கு வாழ்ந்த மக்கள் பரதர், பரத்தியர் என அழைக்கப்பட்டனர். முக்கியத் தொழிலாக மீன் பிடித்தல் இருந்தது. நெய்தல் நில ஊர்கள் பட்டினம், பாக்கம் என்று அழைக்கப்பட்டன. 


5. பாலைத் திணை : 

பாலை நிலம் என்பது மணலும் மணல் சார்ந்த இடமாகும். பாலை நில மக்கள் கொற்றவை அல்லது காளியை கடவுளாக வழிபட்டனர். இங்கு வாழ்ந்த மக்கள் எயினர், எய்ற்றியர் என அழைக்கப்பட்டனர். முக்கியத் தொழிலாக வழிப்பறிக் தொழில் இருந்தது. இவர்கள் கொள்ளை அடிப்பதில் கிடைத்த உணவுகளை உண்டனர். பாலை நில ஊர்கள் குறும்பு என்று அழைக்கப்பட்டன. 







பாண்டிய மன்னர்கள்

பாண்டியர்கள் : 

பாண்டியர்கள் மதுரையை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தனர். அவர்களின் சின்னம் மீன். முற்காலப் பாண்டிய அரசர்கள் பற்றி ஏராளமான செய்திகளை சங்க கால இலக்கியங்கள் தருகின்றன. அதில் எடுத்துத்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம் போன்றவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. அசோகரின் இரண்டாம் பாறைக் கல்வெட்டில் பாண்டிய அரசர்கள் என்ற பெயர் இடம்பெற்று உள்ளது. எனவே இக்கல்வெட்டு தமிழ்நாட்டில் பாண்டிய அரசு இருந்ததை உறுதி செய்கிறது. மாங்குளம் கல்வெட்டு, சின்னமனூர் செப்பேடுகள், வேள்விக்குடி செப்பேடுகள் மற்றும் தளவாயாபுரம் செப்பேடுகள் ஆகியவை பாண்டிய அரசர்கள் பற்றிக் கூறுகிறது. மேலும் இலங்கை நூலான மகாவம்சம், பிளினி, தாலமி, பெரிபுளூக்ஸ், மெகஸ்தனிஸ் போன்றோரின் குறிப்புகள் மூலமாக பாண்டிய அரசு பற்றி அறிய முடிகிறது. 


பாண்டியர்கள் சங்கம் வைத்து தமிழ் வளர்த்தனர் என்று இறையனார் அகப்பொருள் உரை எழுதிய ஆசிரியர் கூறுகிறார். தென்மதுரையில் இயங்கிய முதற் சங்கத்தை 89 பாண்டிய அரசர்கள் ஆதரித்தனர். கபாடபுரத்தில் இயங்கிய இடைச் சங்கத்தை 59 பாண்டிய அரசர்கள் ஆதரித்தனர். தற்போதுள்ள மதுரையில் இயங்கிய கடைச் சங்கத்தை 49 பாண்டிய அரசர்கள் ஆதரித்தனர். பாண்டியர்களின் தலைநகரங்களான தென் மதுரையும், கபாடபுரமும் கடல் கொண்டு சென்றுவிட்டது. எனவே முடத்திருமாறன் பாண்டியர்களின் தலைநகரத்தை தற்போதுள்ள மதுரைக்கு மாற்றினார். மதுரையில் கடைச் சங்கத்தை நிறுவினார். 


பாண்டியர் மரபில் முற்காலப் பாண்டியர்கள், பிற்காலப் பாண்டியர்கள் என இரு பிரிவினர் உள்ளனர். அதில் சங்க காலத்தில் ஆட்சி புரிந்த பாண்டிய அரசர்களே முற்காலப் பாண்டியர்கள். இவர்கள் மூவேந்தர்களில் ஒருவராக இருந்தனர். அம்மரபில் முதுகுடுமி பெருவழுதி, ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆகியோர் சிறந்த அரசர்களாக கருதப்படுகினர். 


முதுகுடுமி பெருவழுதி : 

முதுகுடுமி பெருவழுதி சிறந்த போர் வீரனாக இருந்தார். பல வேள்விகளை நடத்தினார். பல யாக சாலைகளை அமைத்துக் கொடுத்தார். எனவே பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி என்ற விருதுப் பெயரைப் பெற்றார். 


ஆரியப் படைகடந்த நெடுஞ்செழியன் : 

* வட இந்தியாவின் மீது படையெடுத்துச் சென்று ஆரியப் படைகளை முறியடித்தார். எனவே ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் என்ற விருதுப் பெயரைப் பெற்றார். இமயமலையில் பாண்டியர்களின் சின்னமான மீன் கொடியை நட்டார். ஆயினும் இப்படையெடுப்பு குறித்து உறுதியான சான்றுகள் எதுவும் இல்லை. 

* சிலப்பதிகாரத்தின் தலைவன் கோவலனுக்கு தவறான தீர்ப்பு வழங்கினார். பின்னர் கோவலன் குற்றமற்றவன் என்று அறிந்த உடன் "யானோ அரசன் யானே கள்வன்" என்று கூறிவிட்டு, அரசவையிலேயே உயிர் துறந்தார். அதைக் கண்ட அவர் மனைவியும் உயிர் துறந்தார். எனவே அவர் "அரசக் கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன்" என்று அழைக்கப்பட்டார். இவர் சேரன் செங்குட்டுவனின் சமகாலத்து அரசர் என்பது குறிப்பிடத்தக்கது. 


தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் : 

சங்க காலப் பாண்டிய அரசர்களில் புகழ் மிக்கவர் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். இளம் வயதிலேயே அரியணை ஏறினார். மிகச் சிறந்த போர் வீரனாக விளங்கினார். தலையாலங்கானம் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் மாபெரும் வெற்றி பெற்றார். இப்போரில் சேர மன்னர் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, சோழ மன்னர் பெருநற்கிள்ளி மற்றும் ஐந்து வேளிர் குலத் தலைவர்களின் கூட்டுப்படையை முறியடித்தார். எனவே தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்ற விருதுப் பெயரைப் பெற்றார். 


முடிவு : 

கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் தமிழ்நாடு முழுவதும் களப்பிரர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. அதன் விளைவாக மூவேந்தர்களின் ஆட்சி வீழ்ச்சி அடையத் தொடங்கியது. இறுதியில் களப்பிரர்களுக்கு கப்பம் கட்டும் குறுநில மன்னர்களாக பாண்டியர்கள் மாறினர். 







சோழ மன்னர்கள்

சோழர்கள் : 

சோழர்கள் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தனர். மாற்றுத் தலைநகரமாக புகார் இருந்தது. அவர்களின் சின்னம் புலி. முற்காலச் சோழ அரசர்களைப் பற்றி ஏராளமான செய்திகளை சங்க கால இலக்கியங்கள் தருகின்றன. அதில் எடுத்துத்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம் போன்றவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. சோழ அரசர்கள் என்ற பெயர் முதன் முதலாக அசோகரின் இரண்டாம் பாறைக் கல்வெட்டில் தான் இடம்பெற்று உள்ளது. இக்கல்வெட்டு மூலம் தமிழ்நாட்டில் சோழ அரசு இருந்தது உறுதியாகிறது. மேலும் இலங்கை நூலான மகாவம்சம், பிளினி, தாலமி, பெரிபுளூக்ஸ், மெகஸ்தனிஸ் போன்றோரின் குறிப்புகள் மூலமாக சோழ அரசு பற்றி அறிய முடிகிறது. 


சோழர் மரபில் முற்காலச் சோழர்கள், பிற்காலச் சோழர்கள் என இரு பிரிவினர் உள்ளனர். அதில் சங்க காலத்தில் ஆட்சி புரிந்த சோழ அரசர்களே முற்காலச் சோழர்கள். இவர்கள் மூவேந்தர்களில் ஒருவராக இருந்தனர். அம்மரபில் இளஞ்சேட்சென்னி, கரிகாலன், பெருநற்கிள்ளி ஆகியோர் நன்கு அறியப்படும் அரசர்களாவர். 


இளஞ்சேட்சென்னி : 

இளஞ்சேட்சென்னி உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தார். அவர் வம்பர், வடுகர் ஆகிய இரு குறுநில அரசர்களை வெற்றி கொண்டார். அழகிய பல தேர்களை வைத்திருந்தார். எனவே உருவப்பற்றேர் இளஞ்சேட்சென்னி என்று அழைக்கப்பட்டார். இவர் மௌரியப் படையெடுப்பை முறியடிக்க தமிழரசுகளின் கூட்டமைப்பை உருவாக்கினார் எனத் தெரிகிறது. 


கரிகாலச் சோழன் : 

* கரிகாலன் பிறக்கும் முன்பே அவரது தந்தை இளஞ்சேட்சென்னி இறந்துவிட்டார். எனவே கரிகாலன் தாயின் வயிற்றில் இருக்கும் போதே அரசுரிமை எய்தினார். கரிகாலன் சிறுவனாக இருக்கும் போதே அவனைக் கொல்ல பகைவர்கள் சதி திட்டம் தீட்டினர். கரிகாலனும் அவனது தாயாரும் சிறையில் அடைக்கப்பட்டனர். கரிகாலன் சிறையில் இருந்து தப்பிச் செல்லும் போது அவனது கால் தீயில் கருகியது. எனவே அவனுக்கு கரிகாலன் என்ற பெயர் வந்தது. இது தவிர்த்து கரிகாலன் என்ற பெயருக்கு வேறு பல காரணங்களும் கூறப்படுகிறது. தனது தாய்மாமன் இரும்பிடர்த் தலையார் பாதுகாப்பில் வளர்ந்தார். அவரது உதவியோடு உறையூர் அரியணையை மீட்டார். 


* வெண்ணிப் பறந்தலைப் போர் கரிகாலன் களம் கண்ட முதல் போராகும். அப்போரில் பதினோரு அரசர்களின் கூட்டுப் படையை கரிகாலன் வீழ்த்தினார். இப்போரின் முடிவில் சேர அரசனும், பாண்டிய அரசனும் இறந்தனர். ஒன்பது குறுநில மன்னர்களும் புறமுதுகிட்டு ஓடினர். 


* ஒன்பது குறுநில மன்னர்களும் தோல்விக்கு பழிதீர்க்க மற்றொரு போருக்கு வந்தனர். அப்போது நடைபெற்ற வாகைப் பறந்தலைப் போரில் கரிகாலனே மீண்டும் வெற்றி பெற்றார். 


* தனது புகழ் மேலும் பரவ வேண்டுமென கரிகாலன் விரும்பினார். எனவே வட இந்தியாவின் மீது படையெடுத்துச் சென்றார். வச்சிரம், மகதம், அவந்தி ஆகிய மூன்று நாடுகளை வெற்றி கொண்டார். இமயமலையில் சோழர்களின் சின்னமான புலிக் கொடியை நட்டார். 


* இலங்கையின் மீதான படையெடுப்பிலும் வெற்றி பெற்றார். அங்கிருந்து பிடித்து வரப்பட்ட போர் கைதிகளை கொண்டு காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணை கட்டினார். இது உலகிலேயே மிகப் பழமையான கல்லணையாகத் திகழ்கிறது. காவிரி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் புகார் என்ற துறைமுக நகரத்தை உருக்கி அதை மாற்றுத் தலைநகரமாக அறிவித்தார். புகார் நகரம் பூம்புகார் அல்லது காவிரிப் பூம்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது. 


கரிகாலனின் வாரிசுகள் : 

கரிகாலச் சோழனுக்கு மணக்கிள்ளி, பெருவிரற்கிள்ளி என்று இரு மகன்கள் இருந்தனர். கரிகாலனுக்குப் பிறகு உறையூரைத் தலைநகராகக் கொண்டு மணக்கிள்ளியும் புகாரைத் தலைநகராகக் கொண்டு பெருவிரற்கிள்ளியும் ஆட்சி புரிந்து வந்தனர். 


* பெருவிரற்கிள்ளிக்கு கிள்ளிவளவன், நலங்கிள்ளி, மாவளத்தான் என்று மூன்று மகன்கள் இருந்தனர். பெருவிரற்கிள்ளிக்குப் பிறகு அவரது மூத்த மகன் கிள்ளிவளவன் புகார் நகரில் அரியணை ஏறினான். போர்வீரம் மிகுந்து காணப்பட்ட நலங்கிள்ளி அவனது படைத் தளபதியாக செயல்பட்டான். அதேபோல் மணக்கிள்ளிக்கு நெடுங்கிள்ளி என்ற மகனும் நற்சோனை என்ற மகளும் இருந்தனர். நற்சோனையை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கு மணம் முடித்துக் கொடுத்தார். மணக்கிள்ளிக்குப் பிறகு அவரது மகன் நெடுங்கிள்ளி உறையூர் நகரில் அரியணை ஏறினார். இரு பிரிவு சோழர்களுக்கு இடையே ஏற்பட்ட ஆதிக்கப் போரில் நெடுங்கிள்ளி கொல்லப்பட்டார். 


ராஜசூயம்வேட்ட பெருநற்கிள்ளி : 

* நெடுங்கிள்ளியின் மகன் பெருநற்கிள்ளி அரியணையை இழந்து தவித்து வந்தான். அதை அறிந்த சேரன் செங்குட்டுவன் தனது மைத்துனனுக்கு உதவ பெரும்படை ஒன்றை அனுப்பி வைத்தார். போரில் வெற்றி கண்ட சேரன் செங்குட்டுவன் பெருநற்கிள்ளிக்கு உறையூர் அரியணையை மீட்டுத் தந்தார். பின்னர் பல காலம் ஆட்சி புரிந்து வந்த பெருநற்கிள்ளி தனது வயது முதிர்ந்த காலத்தில் இராஜசூய யாகம் ஒன்றை நடத்தினார். எனவே அவர் ராஜசூயம்வேட்ட பெருநற்கிள்ளி என்ற அடைமொழியில் அழைக்கப்படுகிறார். 


முடிவு : 

கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் தமிழ்நாடு முழுவதும் களப்பிரர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. அதன் விளைவாக மூவேந்தர்களின் ஆட்சி வீழ்ச்சி அடையத் தொடங்கியது. இறுதியில் களப்பிரர்களுக்கு கப்பம் கட்டும் குறுநில மன்னர்களாக சோழர்கள் மாறினர். 







சேர மன்னர்கள்

சேரர்கள் : 

சேரர்கள் வஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தனர். அவர்களின் சின்னம் வில் அம்பு. அசோகரின் இரண்டாம் பாறைக் கல்வெட்டு சேர அரசர்களை கேரளப் புத்திரர்கள் என்றே குறிப்பிடுகிறது. அதேபோல் சங்க இலக்கியங்களும் சேர நாட்டின் பெரும் பகுதி கேரளாவில் இருப்பதாகவே கூறுகிறது. ஆனால் புகளூர் கல்வெட்டு கரூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த மூன்று தலைமுறை சேர அரசர்களின் பெயர்களை கூறுகிறது. எனவே வஞ்சி என்பது கேரளாவில் உள்ள திருவஞ்சிக்களம் என்று ஒரு பிரிவினர் கூறுகின்றனர். ஆனால் மற்றொரு பிரிவினர் வஞ்சி என்பது தமிழ்நாட்டில் உள்ள கரூர் நகரமே என்று கூறுகின்றனர். 


சங்க காலத்தில் ஆட்சி புரிந்த பத்து சேர அரசர்களைப் பற்றி பதிற்றுப்பத்து கூறுகிறது. அவர்களில் உதியன் சேரலாதன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன் ஆகியோர் நன்கு அறியப்படும் அரசர்கள் ஆவர். 


உதியன் சேரலாதன் : 

சேரலாதன் மரபை தோற்றுவித்தவர் உதியன் சேரலாதன் ஆவார். மகாபாரதப் போரில் ஈடுபட்ட இருதரப்பு போர் வீரர்களுக்கும் உணவு வழங்கினார் என்று சங்க பாடல் வழியாக அறிய முடிகிறது. எனவே பெருஞ்சோற்று சேரலாதன் என்ற விருதுப் பெயரைப் பெற்றார். 


இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் : 

உதியன் சேரலாதனின் மகனாக கருதப்படும் நெடுஞ்சேரலாதன் கடம்பர்களுடனான போரில் வெற்றி பெற்றார். கடம்பர்களின் காவல் மரமான கடம்ப மரத்தை வெட்டி அதில் வீரமுரசு செய்தார் என அகநானூறு கூறுகிறது. வட இந்தியாவின் மீது படையெடுத்துச் சென்றார். இமயமலையில் சேரர்களின் சின்னமான வில் அம்பு கொடியை நட்டார் என பதிற்றுப்பத்து கூறுகிறது. எனவே "இமயவரம்பன்" என்ற விருதுப் பெயரைப் பெற்றார். ஆனால் வடஇந்திய படையெடுப்பு நடந்ததற்கு உறுதியான சான்றுகள் எதுவும் இல்லை. எனவே பல வரலாற்று ஆசிரியர்கள் இதை ஏற்க மறுக்கின்றனர். 


சேரன் செங்குட்டுவன் : 

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மூத்த மகன் சேரன் செங்குட்டுவன். தந்தையை மிஞ்சிய தனயனாக செங்குட்டுவன் விளங்கினார். சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகள் இவரது சகோதரர் ஆவார். இமயவரம்பனுக்கு பிறகு அவரது இளைய மகனான இளங்கோவடிகளே அரியணை ஏறுவார் என ஜோதிடர் கூறினார். அதனால் இமயவரம்பன் மிகவும் வருத்தமடைந்தார்.‌ அதை அறிந்த இளங்கோவடிகள் துறவறம் பூண்டார். 


* வணிகர்களுக்கு இடையூறு செய்து வந்த கடல் கொள்ளையர்களான கடம்பர்களை வீழ்த்தினார். எனவே "கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்" என்ற விருதுப் பெயரைப் பெற்றார். 


* சோழப் பேரரசில் ஏற்பட்ட வாரிசுரிமைப் போரில் கிள்ளி வளவனுக்கு ஆதரவாகப் நின்றார். நேரிவாயில் போரில் ஒன்பது குறுநில அரசர்களை வீழ்த்தி கிள்ளி வளவனுக்கு சோழ அரியணையைப் பெற்றுத் தந்தார். 


* செங்குட்டுவனின் நண்பன் அறுகையை மோகூரை ஆண்ட பழையன் சிறை பிடித்தான். மோகூர் போரில் பழையனைத் தோற்கடித்து தனது நண்பன் அறுகையை விடுவித்தார். 


* கண்ணகிக்கு சிலை வடிக்க இமயமலையில் இருந்து கல் கொண்டுவரச் சென்றார். தன் தந்தையைப் போலவே இமயமலையில் வில்லம்பு கொடியை நட்டார். வட இந்தியாவில் தன்னை எதிர்த்துப் போரிட்ட கனக விசயர் என்ற மன்னரைத் தோற்கடித்தார். பின்னர் அவன் தலை மீது ஒரு கல்லை வைத்து அதை தமிழகம் கொண்டுவரச் செய்தார். அக்கல்லில் கண்ணகிக்கு சிலை வடித்து விழா எடுத்தார். அதில் இலங்கை மன்னன் கயவாகு கலந்து கொண்டார் என சிலப்பதிகாரம் கூறுகிறது. 


முடிவு : 

கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் தமிழ்நாடு முழுவதும் களப்பிரர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. அதன் விளைவாக மூவேந்தர்களின் ஆட்சி வீழ்ச்சி அடையத் தொடங்கியது. இறுதியில் சேரர்கள் முழுவதுமாக மறைந்துப் போயினர். 







Featured Post

சிந்தனைக் களம் - 3

வெற்றிக்குத் தேவை இலக்கு வெற்றி என்பது தேர்ந்தெடுத்த ஒரு இலக்கை அடைவதன் மூலம் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் மகிழ்ச்சியடையச் செய்யும் ஒ...

Popular Posts