Home

07 February 2024

பாண்டிய மன்னர்கள்

பாண்டியர்கள் : 

பாண்டியர்கள் மதுரையை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தனர். அவர்களின் சின்னம் மீன். முற்காலப் பாண்டிய அரசர்கள் பற்றி ஏராளமான செய்திகளை சங்க கால இலக்கியங்கள் தருகின்றன. அதில் எடுத்துத்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம் போன்றவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. அசோகரின் இரண்டாம் பாறைக் கல்வெட்டில் பாண்டிய அரசர்கள் என்ற பெயர் இடம்பெற்று உள்ளது. எனவே இக்கல்வெட்டு தமிழ்நாட்டில் பாண்டிய அரசு இருந்ததை உறுதி செய்கிறது. மாங்குளம் கல்வெட்டு, சின்னமனூர் செப்பேடுகள், வேள்விக்குடி செப்பேடுகள் மற்றும் தளவாயாபுரம் செப்பேடுகள் ஆகியவை பாண்டிய அரசர்கள் பற்றிக் கூறுகிறது. மேலும் இலங்கை நூலான மகாவம்சம், பிளினி, தாலமி, பெரிபுளூக்ஸ், மெகஸ்தனிஸ் போன்றோரின் குறிப்புகள் மூலமாக பாண்டிய அரசு பற்றி அறிய முடிகிறது. 


பாண்டியர்கள் சங்கம் வைத்து தமிழ் வளர்த்தனர் என்று இறையனார் அகப்பொருள் உரை எழுதிய ஆசிரியர் கூறுகிறார். தென்மதுரையில் இயங்கிய முதற் சங்கத்தை 89 பாண்டிய அரசர்கள் ஆதரித்தனர். கபாடபுரத்தில் இயங்கிய இடைச் சங்கத்தை 59 பாண்டிய அரசர்கள் ஆதரித்தனர். தற்போதுள்ள மதுரையில் இயங்கிய கடைச் சங்கத்தை 49 பாண்டிய அரசர்கள் ஆதரித்தனர். பாண்டியர்களின் தலைநகரங்களான தென் மதுரையும், கபாடபுரமும் கடல் கொண்டு சென்றுவிட்டது. எனவே முடத்திருமாறன் பாண்டியர்களின் தலைநகரத்தை தற்போதுள்ள மதுரைக்கு மாற்றினார். மதுரையில் கடைச் சங்கத்தை நிறுவினார். 


பாண்டியர் மரபில் முற்காலப் பாண்டியர்கள், பிற்காலப் பாண்டியர்கள் என இரு பிரிவினர் உள்ளனர். அதில் சங்க காலத்தில் ஆட்சி புரிந்த பாண்டிய அரசர்களே முற்காலப் பாண்டியர்கள். இவர்கள் மூவேந்தர்களில் ஒருவராக இருந்தனர். அம்மரபில் முதுகுடுமி பெருவழுதி, ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆகியோர் சிறந்த அரசர்களாக கருதப்படுகினர். 


முதுகுடுமி பெருவழுதி : 

முதுகுடுமி பெருவழுதி சிறந்த போர் வீரனாக இருந்தார். பல வேள்விகளை நடத்தினார். பல யாக சாலைகளை அமைத்துக் கொடுத்தார். எனவே பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி என்ற விருதுப் பெயரைப் பெற்றார். 


ஆரியப் படைகடந்த நெடுஞ்செழியன் : 

* வட இந்தியாவின் மீது படையெடுத்துச் சென்று ஆரியப் படைகளை முறியடித்தார். எனவே ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் என்ற விருதுப் பெயரைப் பெற்றார். இமயமலையில் பாண்டியர்களின் சின்னமான மீன் கொடியை நட்டார். ஆயினும் இப்படையெடுப்பு குறித்து உறுதியான சான்றுகள் எதுவும் இல்லை. 

* சிலப்பதிகாரத்தின் தலைவன் கோவலனுக்கு தவறான தீர்ப்பு வழங்கினார். பின்னர் கோவலன் குற்றமற்றவன் என்று அறிந்த உடன் "யானோ அரசன் யானே கள்வன்" என்று கூறிவிட்டு, அரசவையிலேயே உயிர் துறந்தார். அதைக் கண்ட அவர் மனைவியும் உயிர் துறந்தார். எனவே அவர் "அரசக் கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன்" என்று அழைக்கப்பட்டார். இவர் சேரன் செங்குட்டுவனின் சமகாலத்து அரசர் என்பது குறிப்பிடத்தக்கது. 


தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் : 

சங்க காலப் பாண்டிய அரசர்களில் புகழ் மிக்கவர் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். இளம் வயதிலேயே அரியணை ஏறினார். மிகச் சிறந்த போர் வீரனாக விளங்கினார். தலையாலங்கானம் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் மாபெரும் வெற்றி பெற்றார். இப்போரில் சேர மன்னர் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, சோழ மன்னர் பெருநற்கிள்ளி மற்றும் ஐந்து வேளிர் குலத் தலைவர்களின் கூட்டுப்படையை முறியடித்தார். எனவே தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்ற விருதுப் பெயரைப் பெற்றார். 


முடிவு : 

கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் தமிழ்நாடு முழுவதும் களப்பிரர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. அதன் விளைவாக மூவேந்தர்களின் ஆட்சி வீழ்ச்சி அடையத் தொடங்கியது. இறுதியில் களப்பிரர்களுக்கு கப்பம் கட்டும் குறுநில மன்னர்களாக பாண்டியர்கள் மாறினர். 







சோழ மன்னர்கள்

சோழர்கள் : 

சோழர்கள் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தனர். மாற்றுத் தலைநகரமாக புகார் இருந்தது. அவர்களின் சின்னம் புலி. முற்காலச் சோழ அரசர்களைப் பற்றி ஏராளமான செய்திகளை சங்க கால இலக்கியங்கள் தருகின்றன. அதில் எடுத்துத்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம் போன்றவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. சோழ அரசர்கள் என்ற பெயர் முதன் முதலாக அசோகரின் இரண்டாம் பாறைக் கல்வெட்டில் தான் இடம்பெற்று உள்ளது. இக்கல்வெட்டு மூலம் தமிழ்நாட்டில் சோழ அரசு இருந்தது உறுதியாகிறது. மேலும் இலங்கை நூலான மகாவம்சம், பிளினி, தாலமி, பெரிபுளூக்ஸ், மெகஸ்தனிஸ் போன்றோரின் குறிப்புகள் மூலமாக சோழ அரசு பற்றி அறிய முடிகிறது. 


சோழர் மரபில் முற்காலச் சோழர்கள், பிற்காலச் சோழர்கள் என இரு பிரிவினர் உள்ளனர். அதில் சங்க காலத்தில் ஆட்சி புரிந்த சோழ அரசர்களே முற்காலச் சோழர்கள். இவர்கள் மூவேந்தர்களில் ஒருவராக இருந்தனர். அம்மரபில் இளஞ்சேட்சென்னி, கரிகாலன், பெருநற்கிள்ளி ஆகியோர் நன்கு அறியப்படும் அரசர்களாவர். 


இளஞ்சேட்சென்னி : 

இளஞ்சேட்சென்னி உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தார். அவர் வம்பர், வடுகர் ஆகிய இரு குறுநில அரசர்களை வெற்றி கொண்டார். அழகிய பல தேர்களை வைத்திருந்தார். எனவே உருவப்பற்றேர் இளஞ்சேட்சென்னி என்று அழைக்கப்பட்டார். இவர் மௌரியப் படையெடுப்பை முறியடிக்க தமிழரசுகளின் கூட்டமைப்பை உருவாக்கினார் எனத் தெரிகிறது. 


கரிகாலச் சோழன் : 

* கரிகாலன் பிறக்கும் முன்பே அவரது தந்தை இளஞ்சேட்சென்னி இறந்துவிட்டார். எனவே கரிகாலன் தாயின் வயிற்றில் இருக்கும் போதே அரசுரிமை எய்தினார். கரிகாலன் சிறுவனாக இருக்கும் போதே அவனைக் கொல்ல பகைவர்கள் சதி திட்டம் தீட்டினர். கரிகாலனும் அவனது தாயாரும் சிறையில் அடைக்கப்பட்டனர். கரிகாலன் சிறையில் இருந்து தப்பிச் செல்லும் போது அவனது கால் தீயில் கருகியது. எனவே அவனுக்கு கரிகாலன் என்ற பெயர் வந்தது. இது தவிர்த்து கரிகாலன் என்ற பெயருக்கு வேறு பல காரணங்களும் கூறப்படுகிறது. தனது தாய்மாமன் இரும்பிடர்த் தலையார் பாதுகாப்பில் வளர்ந்தார். அவரது உதவியோடு உறையூர் அரியணையை மீட்டார். 


* வெண்ணிப் பறந்தலைப் போர் கரிகாலன் களம் கண்ட முதல் போராகும். அப்போரில் பதினோரு அரசர்களின் கூட்டுப் படையை கரிகாலன் வீழ்த்தினார். இப்போரின் முடிவில் சேர அரசனும், பாண்டிய அரசனும் இறந்தனர். ஒன்பது குறுநில மன்னர்களும் புறமுதுகிட்டு ஓடினர். 


* ஒன்பது குறுநில மன்னர்களும் தோல்விக்கு பழிதீர்க்க மற்றொரு போருக்கு வந்தனர். அப்போது நடைபெற்ற வாகைப் பறந்தலைப் போரில் கரிகாலனே மீண்டும் வெற்றி பெற்றார். 


* தனது புகழ் மேலும் பரவ வேண்டுமென கரிகாலன் விரும்பினார். எனவே வட இந்தியாவின் மீது படையெடுத்துச் சென்றார். வச்சிரம், மகதம், அவந்தி ஆகிய மூன்று நாடுகளை வெற்றி கொண்டார். இமயமலையில் சோழர்களின் சின்னமான புலிக் கொடியை நட்டார். 


* இலங்கையின் மீதான படையெடுப்பிலும் வெற்றி பெற்றார். அங்கிருந்து பிடித்து வரப்பட்ட போர் கைதிகளை கொண்டு காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணை கட்டினார். இது உலகிலேயே மிகப் பழமையான கல்லணையாகத் திகழ்கிறது. காவிரி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் புகார் என்ற துறைமுக நகரத்தை உருக்கி அதை மாற்றுத் தலைநகரமாக அறிவித்தார். புகார் நகரம் பூம்புகார் அல்லது காவிரிப் பூம்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது. 


கரிகாலனின் வாரிசுகள் : 

கரிகாலச் சோழனுக்கு மணக்கிள்ளி, பெருவிரற்கிள்ளி என்று இரு மகன்கள் இருந்தனர். கரிகாலனுக்குப் பிறகு உறையூரைத் தலைநகராகக் கொண்டு மணக்கிள்ளியும் புகாரைத் தலைநகராகக் கொண்டு பெருவிரற்கிள்ளியும் ஆட்சி புரிந்து வந்தனர். 


* பெருவிரற்கிள்ளிக்கு கிள்ளிவளவன், நலங்கிள்ளி, மாவளத்தான் என்று மூன்று மகன்கள் இருந்தனர். பெருவிரற்கிள்ளிக்குப் பிறகு அவரது மூத்த மகன் கிள்ளிவளவன் புகார் நகரில் அரியணை ஏறினான். போர்வீரம் மிகுந்து காணப்பட்ட நலங்கிள்ளி அவனது படைத் தளபதியாக செயல்பட்டான். அதேபோல் மணக்கிள்ளிக்கு நெடுங்கிள்ளி என்ற மகனும் நற்சோனை என்ற மகளும் இருந்தனர். நற்சோனையை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கு மணம் முடித்துக் கொடுத்தார். மணக்கிள்ளிக்குப் பிறகு அவரது மகன் நெடுங்கிள்ளி உறையூர் நகரில் அரியணை ஏறினார். இரு பிரிவு சோழர்களுக்கு இடையே ஏற்பட்ட ஆதிக்கப் போரில் நெடுங்கிள்ளி கொல்லப்பட்டார். 


ராஜசூயம்வேட்ட பெருநற்கிள்ளி : 

* நெடுங்கிள்ளியின் மகன் பெருநற்கிள்ளி அரியணையை இழந்து தவித்து வந்தான். அதை அறிந்த சேரன் செங்குட்டுவன் தனது மைத்துனனுக்கு உதவ பெரும்படை ஒன்றை அனுப்பி வைத்தார். போரில் வெற்றி கண்ட சேரன் செங்குட்டுவன் பெருநற்கிள்ளிக்கு உறையூர் அரியணையை மீட்டுத் தந்தார். பின்னர் பல காலம் ஆட்சி புரிந்து வந்த பெருநற்கிள்ளி தனது வயது முதிர்ந்த காலத்தில் இராஜசூய யாகம் ஒன்றை நடத்தினார். எனவே அவர் ராஜசூயம்வேட்ட பெருநற்கிள்ளி என்ற அடைமொழியில் அழைக்கப்படுகிறார். 


முடிவு : 

கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் தமிழ்நாடு முழுவதும் களப்பிரர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. அதன் விளைவாக மூவேந்தர்களின் ஆட்சி வீழ்ச்சி அடையத் தொடங்கியது. இறுதியில் களப்பிரர்களுக்கு கப்பம் கட்டும் குறுநில மன்னர்களாக சோழர்கள் மாறினர். 







சேர மன்னர்கள்

சேரர்கள் : 

சேரர்கள் வஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தனர். அவர்களின் சின்னம் வில் அம்பு. அசோகரின் இரண்டாம் பாறைக் கல்வெட்டு சேர அரசர்களை கேரளப் புத்திரர்கள் என்றே குறிப்பிடுகிறது. அதேபோல் சங்க இலக்கியங்களும் சேர நாட்டின் பெரும் பகுதி கேரளாவில் இருப்பதாகவே கூறுகிறது. ஆனால் புகளூர் கல்வெட்டு கரூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த மூன்று தலைமுறை சேர அரசர்களின் பெயர்களை கூறுகிறது. எனவே வஞ்சி என்பது கேரளாவில் உள்ள திருவஞ்சிக்களம் என்று ஒரு பிரிவினர் கூறுகின்றனர். ஆனால் மற்றொரு பிரிவினர் வஞ்சி என்பது தமிழ்நாட்டில் உள்ள கரூர் நகரமே என்று கூறுகின்றனர். 


சங்க காலத்தில் ஆட்சி புரிந்த பத்து சேர அரசர்களைப் பற்றி பதிற்றுப்பத்து கூறுகிறது. அவர்களில் உதியன் சேரலாதன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன் ஆகியோர் நன்கு அறியப்படும் அரசர்கள் ஆவர். 


உதியன் சேரலாதன் : 

சேரலாதன் மரபை தோற்றுவித்தவர் உதியன் சேரலாதன் ஆவார். மகாபாரதப் போரில் ஈடுபட்ட இருதரப்பு போர் வீரர்களுக்கும் உணவு வழங்கினார் என்று சங்க பாடல் வழியாக அறிய முடிகிறது. எனவே பெருஞ்சோற்று சேரலாதன் என்ற விருதுப் பெயரைப் பெற்றார். 


இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் : 

உதியன் சேரலாதனின் மகனாக கருதப்படும் நெடுஞ்சேரலாதன் கடம்பர்களுடனான போரில் வெற்றி பெற்றார். கடம்பர்களின் காவல் மரமான கடம்ப மரத்தை வெட்டி அதில் வீரமுரசு செய்தார் என அகநானூறு கூறுகிறது. வட இந்தியாவின் மீது படையெடுத்துச் சென்றார். இமயமலையில் சேரர்களின் சின்னமான வில் அம்பு கொடியை நட்டார் என பதிற்றுப்பத்து கூறுகிறது. எனவே "இமயவரம்பன்" என்ற விருதுப் பெயரைப் பெற்றார். ஆனால் வடஇந்திய படையெடுப்பு நடந்ததற்கு உறுதியான சான்றுகள் எதுவும் இல்லை. எனவே பல வரலாற்று ஆசிரியர்கள் இதை ஏற்க மறுக்கின்றனர். 


சேரன் செங்குட்டுவன் : 

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மூத்த மகன் சேரன் செங்குட்டுவன். தந்தையை மிஞ்சிய தனயனாக செங்குட்டுவன் விளங்கினார். சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகள் இவரது சகோதரர் ஆவார். இமயவரம்பனுக்கு பிறகு அவரது இளைய மகனான இளங்கோவடிகளே அரியணை ஏறுவார் என ஜோதிடர் கூறினார். அதனால் இமயவரம்பன் மிகவும் வருத்தமடைந்தார்.‌ அதை அறிந்த இளங்கோவடிகள் துறவறம் பூண்டார். 


* வணிகர்களுக்கு இடையூறு செய்து வந்த கடல் கொள்ளையர்களான கடம்பர்களை வீழ்த்தினார். எனவே "கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்" என்ற விருதுப் பெயரைப் பெற்றார். 


* சோழப் பேரரசில் ஏற்பட்ட வாரிசுரிமைப் போரில் கிள்ளி வளவனுக்கு ஆதரவாகப் நின்றார். நேரிவாயில் போரில் ஒன்பது குறுநில அரசர்களை வீழ்த்தி கிள்ளி வளவனுக்கு சோழ அரியணையைப் பெற்றுத் தந்தார். 


* செங்குட்டுவனின் நண்பன் அறுகையை மோகூரை ஆண்ட பழையன் சிறை பிடித்தான். மோகூர் போரில் பழையனைத் தோற்கடித்து தனது நண்பன் அறுகையை விடுவித்தார். 


* கண்ணகிக்கு சிலை வடிக்க இமயமலையில் இருந்து கல் கொண்டுவரச் சென்றார். தன் தந்தையைப் போலவே இமயமலையில் வில்லம்பு கொடியை நட்டார். வட இந்தியாவில் தன்னை எதிர்த்துப் போரிட்ட கனக விசயர் என்ற மன்னரைத் தோற்கடித்தார். பின்னர் அவன் தலை மீது ஒரு கல்லை வைத்து அதை தமிழகம் கொண்டுவரச் செய்தார். அக்கல்லில் கண்ணகிக்கு சிலை வடித்து விழா எடுத்தார். அதில் இலங்கை மன்னன் கயவாகு கலந்து கொண்டார் என சிலப்பதிகாரம் கூறுகிறது. 


முடிவு : 

கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் தமிழ்நாடு முழுவதும் களப்பிரர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. அதன் விளைவாக மூவேந்தர்களின் ஆட்சி வீழ்ச்சி அடையத் தொடங்கியது. இறுதியில் சேரர்கள் முழுவதுமாக மறைந்துப் போயினர். 







05 February 2024

இராஜராஜ சோழன் சுவடுகள்

மாமன்னர் இராஜராஜ சோழன். 

சோழ மன்னன் சுந்தர சோழனுக்கும் திருக்கோவலூர் மலையான் குலத்தை சேர்ந்த வானவன் மாதேவிக்கும் இரண்டாம் மகனாகப் பிறந்தவன் அருண்மொழி என்னும் ராஜராஜன்.


ஆதித்த கரிகாலன் என்னும் மூத்தோன் கொலையுண்டு இறந்தபிறகு நாட்டு மக்கள் அனைவரும் இளைஞர் அருண்மொழியே முடிசூட ஏற்றவன் என விரும்பினர். அப்போது தனது சிறிய தந்தை மதுராந்தக உத்தம சோழருக்குத் தானே ஆள வேண்டும் என்ற விருப்பம் இருந்ததை அறிந்த அருண்மொழி அவர் விருப்பப்படியே அவரை அரியணையில் அமரச்செய்தான்.


அவர் இருந்தவரை ஆட்சியை மனத்தாலும் நினைக்காமல் இருந்தான். மதுராந்தக உத்தம சோழர் 15 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். அப்போது அருண்மொழி இளவரசராக இருந்தான்.


கி.பி.985ல் மதுராந்தக உத்தமசோழர் மறைந்த பிறகு சோழப் பேரரசனாக அருண்மொழி மணிமுடி சூடினான். முடிசூட்டு விழாவின் போது "ராஜராஜ சோழன்" என்ற சிறப்பு பெயரைச் சூடிக்கொண்டான்.


இளம் வயதிலேயே தாய், தந்தையரை இழந்த ராஜராஜன் தன் பெரிய பாட்டி செம்பியன் மாதேவியார், தமக்கை குந்தவை பிராட்டியார் ஆகியோர் அரவணைப்பில் பண்புடைய பெருமகனாக வளர்ந்தான்.


ராஜராஜனுக்குப் பல மனைவியர் இருந்தனர். இவர்களில் தந்திசக்தி விடங்கி என்னும் லோகமாதேவியே பட்டத்தரசியாக விளங்கியவர்.


மாமன்னனுக்கு வானவன் மாதேவியின் மூலம் பிறந்த ஒரே மகன் மதுராந்தகன் என்னும் ராஜேந்திர சோழனாவான். இவனுக்கு இரண்டு தங்கையர்கள் இருந்தனர். மூத்தவள் மாதேவி அடிகள், இளையவள் குந்தவை.


ராஜராஜன் தன் பாட்டி செம்பியன் மாதேவியார் நினைவாக ஒரு பெண்ணுக்கு மாதேவி அடிகள் என்றும், சகோதரி குந்தவைப் பிராட்டியார் நினைவாக மற்றொரு பெண்னுக்கு குந்தவை என்று பெயரிட்டதோடு சிறிய தந்தை மதுராந்தக உத்தம சோழர் நினைவாக மகனுக்கு மதுராந்தகன் என்றும் பெயரிட்டு மகிழ்ந்தான்.


மணிமுடி சூடிய ராஜராஜன் பல்லவர் ஆட்சியில் போர்களின் மிகுதியால் தமிழகத்தின் செல்வ வளங்கள் எல்லாம் சீரழிந்ததை உணர்ந்தான். ஒரு நாடு செழிக்க வேண்டுமெனில் அந்நாடு போர்க்களமே காணாமல் இருக்க வேண்டும் என்பதனை உணர்ந்து சோழநாட்டை சூழ்ந்த எல்லா நாடுகளுக்கும் தூதர்களை அனுப்பி நட்புக்கரம் நீட்டினான்.


எதிர்த்தவர்களை வென்று அவர்களால் மேலும் போர் தொடராதவாறு தன் படைகளையும், தானைத்தலைவர்களையும் அந்நாடுகளில் நிலையாய் இருக்குமாறு செய்தான். இதனால் சோழநாட்டிற்குள் போர் கிடையாது. செல்வ அழிவு கிடையாது.


மாறாக பெருஞ்செல்வம் குவிந்தது. மக்கள் வாழ்க்கை அமைதியாக இருந்தது. கவின் கலைகள் வளர்ந்தன. சைவத்தின்பால் ஏற்பட்ட பற்று காரணமாக "சிவபாதசேகரன்" எனப் பட்டம் சூடி மகிழ்ந்தான்.



திருப்பத்தூர் கந்திலி அருகே 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு

திருப்பத்தூர் அடுத்த கந்திலி தொப்பலகவுண்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன், விவசாயி. இவர் இன்று காலை தனது விவசாய நிலத்திற்கு ஜேசிபி இயந்திரங்கள் மூலம் பைப்லைன் அமைக்க பள்ளம் தோண்டினார். அப்போது சிறிய அளவிலான கொப்பரைகள் மற்றும் மண் சுவடுகள், மண் பாத்திரங்கள், கருப்பு சிவப்பு மண்பாண்டங்கள் மற்றும் ஈமப்பேழை போன்ற பொருட்கள் உள்ளிட்டவைகள் கிடைத்தன. இதையறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். மேலும் இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் பிரபுவிடம் தெரிவித்தார்.


அவர் திருப்பத்தூர் தாசில்தாருக்கு தெரிவித்தார். அதன்பேரில் தாசில்தார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். மேலும் இதுகுறித்து தகவலறிந்த திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் மற்றும் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டு வருபவரான ஆ.பிரபுவும் சம்பவ இடம் வந்து பார்த்து ஆய்வு செய்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் பெருங்கற்காலத்தைச் சேர்ந்தவையாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.


அதாவது பெருங்கற்காலத்தைச் சேர்ந்த அக்கால மக்கள் தங்களுள் மிக முக்கியமானவர்கள் இறக்கும் தருவாயில் அவர்களை நிலத்திற்கு அடியில் அடக்கம் செய்யும்போது அவர்கள் பயன்படுத்திய புழங்கு பொருட்களையும் உடன் வைத்து அடக்கம் செய்யும் மரபு இருந்துள்ளது. அந்த வகையில் இந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் கருப்பு சிவப்பு மண்பாண்டங்கள் மற்றும் ஈம பிழை உடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இவை யாவும் இந்த திருப்பத்தூர் மாவட்டத்தின் முற்கால வரலாற்றினை எடுத்துரைப்பதாக இருக்கிறது. தமிழக அரசின் தொல்லியல் துறையும் இந்த இடத்தில் முறையான அகழாய்வினை மேற்கொள்ளும்போது மேலும் பல அறிய உண்மைகள் வெளி வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

04 February 2024

திருக்கோவிலூா் அருகே கண்டறியப்பட்ட கொற்றவை சிற்பம்

திருக்கோவிலூா் அருகே பல்லவா் கால கொற்றவை சிற்பம் கண்டறியப்பட்டது.


கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், டி.குன்னத்தூா் கிராமத்தில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் ச.பாலமுருகன், சி.பழனிசாமி, சிற்றிங்கூா் ராஜா, திருவாமாத்தூா் கண.சரவணகுமாா் உள்ளிட்டோா் கள ஆய்வு மேற்கொண்டனா். அப்போது 6-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டுடன் கூடிய கொற்றவை சிற்பத்தைக் கண்டறிந்தனா். இதுகுறித்து அவா்கள் தெரிவித்ததாவது:


இங்குள்ள ஏரிக்கரை எதிரே உள்ள நிலத்தில் கிழக்கு பாா்த்தவாறு கொற்றவை சிற்பம் அமைந்துள்ளது. 6 அடி உயரம், 2 அடி அகலமுள்ள இந்தச் சிற்பத்தில் கொற்றவை வடிவம் மிகவும் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. சடையுடன் கூடிய கரண்ட மகுடம், நீண்ட காதணிகள், மாா்பு, இடுப்பில் ஆடையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. உடையில் நோ்த்தியான மடிப்புகள் காணப்படுகின்றன. தோள்களில் வளைகள், காலில் கழல் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. 


8 கரங்களுடன் கூடிய கொற்றவை உருவில் வலப்புற 4 கைகள் அபய முத்திரை, அம்பு, வாள், சக்கரம் ஆகியவற்றை ஏந்தியுள்ளன. இடப்புற 4 கைகளில் ஒன்று இடுப்பில் வைத்தவாறும், மற்ற கைகள் சங்கு, வில், கேடயம் ஆகியவற்றையும் ஏந்தியுள்ளன. சிற்பத்தின் இடை பகுதியில் பெரிய அளவில் கடமான் காட்டப்பட்டுள்ளது. கொற்றவையின் கால் எருமைத் தலையின் மீது அமைந்துள்ளது.


சங்க இலக்கியங்களில் சுட்டிக்காட்டிய இலக்கணத்துடன் இந்தச் சிற்பம் அமைந்துள்ளது. சிற்ப அமைப்பு, அதிலுள்ள வட்டெழுத்து கல்வெட்டுகளை கொண்டு அதன் காலம் 6-ஆம் நூற்றாண்டின் இறுதியை (பல்லவா் காலத்தை) சோ்ந்ததாக இருக்கலாம் என அறிய முடிகிறது. சிற்பத்தின் வலப்புறமுள்ள கல்வெட்டு வட்டெழுத்தில் அமைந்துள்ளது. இதில் ‘பெருவா இலாா் மகன் தோறன்’ என்று ஊகித்து படித்தறியமுடிகிறது. இது கொற்றவை சிற்பத்தை செய்தளித்தவரின் பெயராக இருக்கலாம்.


தமிழ்நாட்டில் திருக்கோவிலூா் பகுதியில்தான் அதிகளவில் கொற்றவை சிற்பங்கள் கிடைத்து வருகின்றன. தாய் தெய்வ வழிபாட்டின் தொட்டிலாக இந்தப் பகுதி விளங்குகிறது. தமிழக தொல்லியல் துறை இதுபோன்ற அரிய சிற்பங்களை பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்தனா்.

03 February 2024

வயல்வெளியில் காளி சிற்பங்கள், கொற்றவை சிலை கண்டெடுப்பு - செஞ்சியில் கிடைத்த பொக்கிஷம்

செஞ்சி அருகே 8 ம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர் காலத்திய கொற்றவை கண்டறியப்பட்டுள்ளது. 


திருவண்ணாமலை மரபுசார் அமைப்பைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ராஜ் பன்னீர் செல்வம் மற்றும் உதயராஜா இணைந்து செஞ்சி பகுதியில் கள ஆய்வு மேற் கொண்ட பொழுது , ஆலம்பூண்டியை அடுத்த திக்காமேடு கிராமத்தில் உள்ள வயல்வெளியில் காளி சிற்பம் ஒன்று இருப்பதாகத் சந்திரன் அவர்கள் அளித்த தகவலின் பெயரில் ஆய்வு மேற்கொள்ளச் சென்றனர். 


செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் உள்ள ரெட்டிபாளையத்தின் வடக்கே உள்ள திக்காமேடு கிராமத்தின் வயல்வெளியின் மத்தியில் உயர்ந்த மேடை மேலே இரண்டு பலகை கல்லால் ஆன காளி சிற்பங்கள் காணப்பட்டது. அவ்விரண்டில் இடது புறம் உள்ள சிற்பம் சுமார் 5 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் நான்கு கரங்களுடன் புடைப்பு சிற்பமாக வடிக்கப்பட்டுள்ள அச்சிற்பம் கொற்றவை சிற்பம் என்பது கண்டறியப்பட்டது. 


போர்வீரர்கள் அணியும் கவசம் போன்ற தலைப்பாரம் கரண்ட மகுடத்துடன் தலையை அலங்கரிக்க , நீள் வட்டமான முகத்தில் தடித்த உதடுகளும் இரு செவிகளில் பத்ர குண்டலும் அணிந்து காட்சி தருகிறார். கழுத்தில் மணிமாலையுடன் கூடிய ஆரம் போன்ற அணிகலன்களையும் தனது அனைத்து கரங்களிலும் தோள்வளை மற்றும் கைவளையுடன் மார்பில் பட்டையான கச்சை அணிந்து காட்சியளிக்கிறார். 


நான்கு கரங்களில் தனது மேல் வலது கரம் சக்கரத்தையும் கீழ் வலது கரம் அருள் பாலிக்கும் அபய முத்திரையிலும் , மேல் இடது கரத்தில் சங்கும் , கீழ் இடது கரம் இடைமீது ஊறு முத்திரையில் காட்டப்பட்டுள்ளது. கொற்றவையின் இடையாடை பெரிய முடிச்சுகளுடன் தொடையைத் தாண்டி நீள , காலருகே இருபக்கமும் வீரர்கள் வடிக்கப்பட்டு எருமை தலையின் மீது நிமிர்ந்து கம்பீரமாக நின்றவாறு காட்சி தருகிறது.


இக்கொற்றவையின் சிற்பபமைதி, ஆடை மற்றும் அணிகலன்களை வைத்து இதன் காலம் கி.பி 8ம் நூற்றாண்டாகக் கருதலாம். 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவைகள் பெரும்பாலும் அஷ்ட புஜங்களுடன் வடிக்கப்பட்டுள்ள நிலையில் , சதுர் புஜமாகக் காட்சி தருவது மிகவும் சொற்பமாக ஆவணம் செய்யப்பட்டுள்ளது.


இதே போன்று ஆலம்பூண்டியை அடுத்த தூரம்பூண்டி கிராமத்தில் அஷ்ட புஜங்களுடன் கூடிய 8 ம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிற்பம் ஒன்று சிதைந்த நிலையில் , வயலுக்கு மத்தியில் இன்றும் சிறப்புற வழிபடப் படுகிறது. அவ்வூர் மக்கள் வீட்டு விசேஷங்கள் தொடங்கி , நிலத்தில் விதைப்பு முதல் அறுவடை வரை என எல்லா நிகழ்வுகளிலும் இக்கொற்றவையை வணங்கியே எல்லா காரியங்களையும் தொடங்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.


சுமார் 1200 வருடங்களுக்கு மேல் பழமையான இக்கொற்றவை இன்றும் வயல்வெளியின் மத்தியில் வெட்ட வெளியில் வளமையைக் காக்கும் தெய்வமாக அருள்பாலித்து வருகிறது. இச்சிற்பத்தை ஊர்மக்கள் முறையாகப் பாதுகாத்து வழிபட்டு வந்தால், அவ்வூரின் தொன்மை காக்கப்படும். 

29 January 2024

12th STD History Internal Mark Record

12 ஆம் வகுப்பு வரலாறு 

அகமதிப்பீடு மதிப்பெண் பதிவேடு

28 January 2024

11th STD History Internal Mark Record

11 ஆம் வகுப்பு வரலாறு 

அகமதிப்பீடு மதிப்பெண் பதிவேடு

07 December 2023

12th Std History Workbook TM and EM - TNPGHTA 2023

12 ஆம் வகுப்பு வரலாறு TM and EM வரைபடப் பயிற்சி ஏடு, ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் மாதாந்திரத் தேர்வு வினாத்தாள்கள் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை தொடவும்.

29 November 2023

11th History Public Exam Question Papers

TN State Board

Public Exam - 11th STD History

Previous Year Question Papers

11th History Public Exam Question Paper June 2023

11th STD History

Public Exam Question Paper

June 2023

11th History Public Exam Question Paper March 2023

11th STD History

Public Exam Question Paper

March 2023

11th History Public Exam Question Paper July 2022

11th STD History

Public Exam Question Paper

July 2022

11th History Public Exam Question Paper May 2022

11th STD History

Public Exam Question Paper

May 2022

11th History Public Exam Question Paper May 2021

11th STD History

Public Exam Question Paper

May 2021

11th History Public Exam Question Paper September 2020

11th STD History

Public Exam Question Paper

September 2020

11th History Public Exam Question Paper March 2020

11th STD History

Public Exam Question Paper

March 2020

Featured Post

சிந்தனைக் களம் - 3

வெற்றிக்குத் தேவை இலக்கு வெற்றி என்பது தேர்ந்தெடுத்த ஒரு இலக்கை அடைவதன் மூலம் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் மகிழ்ச்சியடையச் செய்யும் ஒ...

Popular Posts